மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் திவ்சா பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது மகன் மற்றும் மருமகளை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் ஜமாகான் என்ற நபர், கடந்த சில நாட்களாக தனது மகன் ஆசாத் கான் மற்றும் மருமகள் அஸ்வினி கான் ஆகியோருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனையால் கடும் கோபத்தில் இருந்துள்ளார். சம்பவத்தன்று ஆசாத் மற்றும் அஸ்வினி தம்பதியினர் அங்குள்ள ஒரு உணவகத்தில் இருந்தபோது, திடீரென அங்கு வந்த ஜமா கான், உணவகத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரை எடுத்துக்கொண்டு, அதிவேகமாக அவர்கள் மீது மோதி நசுக்க முயன்றார்.

“>

இந்த கொடூரத் தாக்குதலில் அந்த தம்பதியினர் சென்ற உணவகம் மற்றும் அதன் சுற்றுச்சுவர் கடுமையாக சேதமடைந்ததுடன், இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த அதிவேக கார் மோதலில் மருமகள் அஸ்வினியின் இரண்டு கால்கள் மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, மேலும் மகனுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட தம்பதியினர் உடனடியாக காவல் நிலையத்திற்குச் சென்று தந்தை ஜமா கான் மீது கொலை முயற்சிப் புகார் அளித்தனர், அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில், தனது மகன் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி, கல் வீசித் தாக்கியதாக தந்தை ஜமா கானும் எதிர்ப்புகார் ஒன்றை அளித்துள்ளார். எவ்வாறாயினும், ஒரு குடும்பத் தகராறுக்காக பெற்ற தந்தையே தனது சொந்த பிள்ளைகளை கார் ஏற்றி கொலை செய்யத் துணிந்த இந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நகரத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.