மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் ஸ்ரீதீப் அகாடமி என்ற தனியார் பள்ளியைச் சேர்ந்த பேருந்து ஒன்று, வழக்கம்போல் சுமார் 50 முதல் 60 பள்ளி மாணவர்களைச் சுமந்துகொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மேலும் காலை வேளையில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் பெரும் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாகப் விரைந்த கிராம மக்களும், அப்பகுதி வழிப்போக்கர்களும் பதறியடித்தபடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, பேருந்திற்குள் சிக்கியிருந்த குழந்தைகளை பாதுகாப்பாக வெளியே எடுக்க உதவினர்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் காவல் துறையினரும், பள்ளி நிர்வாகத்தினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிர்ஷ்டவசமாகப் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட போதிலும், இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

மேலும் பள்ளி வாகனங்களின் பராமரிப்பு, அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களின் நியமனம் மற்றும் வீதி பாதுகாப்பு விதிகளைக் கடுமையாகப் பின்பற்றுதல் ஆகியவற்றின் அவசியத்தை இந்த விபத்து மீண்டும் ஒருமுறை உரக்க உணர்த்தியுள்ளது.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய வகையில் தகுதியான ஓட்டுநர்களை நியமிப்பதுடன், வேகக் கட்டுப்பாடு மற்றும் பேருந்துகளின் முறையான பராமரிப்பை நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்து வலுப்பெற்றுள்ளது.

“>