உத்தரப் பிரதேச மாநிலம் குஷினகரில் நடைபெற்று வரும் ‘பைன்சாஹா’ திருவிழாவில், நேற்று மாலை அரங்கேறிய கோர விபத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. சுமார் 60 அடி உயரமுள்ள ராட்சத ராட்டினம் ஒன்று, 80 பயணிகளுடன் சுழன்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அடியோடு சரிந்து விழுந்தது.

ராட்டினம் சுழலும்போதே விசித்திரமான சத்தம் கேட்டதாகவும், பயணிகள் எச்சரித்தும் ஆபரேட்டர் அதைக் கண்டு கொள்ளாமல் ராட்டினத்தை இயக்கியதே இந்த விபத்துக்குக் காரணம் என நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

விபத்து நடந்தவுடன் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரும் பொதுமக்களும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கப் போராடினர். முறையான பராமரிப்பு இல்லாததே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.