ரயிலில் ஏசி கோச்சில் பயணம் செய்வது ஒரு சொகுசான அனுபவம் என்று நினைத்தால், மும்பை – உஜ்ஜைன் அவந்திகா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த ஒரு சம்பவம் பயணிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரயிலின் ஏசி கோச்சில் திடீரென வெப்பம் அதிகரித்ததால் சந்தேகமடைந்த ஒரு பயணி, ஏசி வென்ட்டுகளை (AC vents) சோதித்துப் பார்த்தபோது ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது.

குளிர் தாங்க முடியாத சில பயணிகள், மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஏசி காற்று வரும் துவாரங்களை ‘டக் டேப்’ (Duct tape) கொண்டு முழுமையாக ஒட்டி மூடியிருந்தது தெரியவந்தது.

அந்தப் பயணி அந்த டேப்புகளைப் பிரித்து எடுத்த பிறகுதான் மீண்டும் குளிர் காற்று வரத் தொடங்கியது. இந்தச் செயலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், “பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது மற்றவர்களின் வசதியைப் பற்றியும் கவலைப்பட வேண்டாமா?” என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குளிர் பிடிக்காதவர்கள் கம்பளி ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டுமே தவிர, இப்படிப் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவது முறையல்ல எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.