டெல்லி அணியின் தோல்விக்கு பிறகு ஷாருக் கான் ரிஷப் பண்டைக் கட்டிப்பிடித்து அன்பு முத்தம் கொடுத்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது..

2024 ஐபிஎல்லின் 16 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேற்று  விசாகப்பட்டினத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து சிக்ஸர் மழையை பொழிய செய்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அந்த அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய பில் சால்ட் 18 ரன்களும், சுனில் நரேன் அதிரடியாக 39 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்ஸர் உட்பட 85 ரன்களும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 27 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 54 ரன்களும் எடுத்தனர்.

 

தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் 18 ரன்களும், அதிரடியாக ரிங்கு சிங் 8 பந்துகளில் (ஒரு பவுண்டரி, 3 சிக்ஸ்) 26 ரன்களும் குவித்தனர். அதன்பின் ஆண்ட்ரே ரசல் அவர் பங்குக்கு அதிரடியாக 19 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸ் உட்பட 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 17.2 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷப்பண்ட்  25 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸ் உட்பட 55 ரன்களும்,  ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர் உட்பட 54 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த போட்டியை பார்க்க வந்த பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருந்து வீரர்களை   உற்சாகப்படுத்தினார். பரபரப்பான போட்டியில் ஊதா நிற சட்டை அணிந்து கலந்து கொண்டார்.மேலும்  அவரது மேலாளர் பூஜா தத்லானியும் கலந்து கொண்டார். கொல்கத்தா அணியின்  வெற்றிக்குப் பிறகு, ஷாருக் மைதானத்தில் தனிப்பட்ட முறையில் தனது அணியை வாழ்த்தினார்.

இந்தப் போட்டிக்கு பின்  கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக் கான் டெல்லி வீரர்களை சந்தித்து பேசினார்.குறிப்பாக டெல்லி கேப்டன் ரிஷப் பண்டை கட்டிப்பிடித்து நெற்றியில் அன்பான முத்தத்தை கொடுத்து பேசினார். இதேபோல், ஷாருக் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரையும் மைதானத்தில் இறுக்கமாக கட்டிப்பிடித்தார். அதோடு டெல்லி அணியின் வீரர்கள் ஜெர்ஸியில்    கையெழுத்திட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதே போல மைதானத்தில் அமர்ந்து பண்ட் பேசிக் கொண்டிருந்தபோது, ஷாருக்கான் அவரை சந்திக்க நடந்து வந்த போது, அதை கவனித்த பண்ட் எழுந்தார் அப்போது ஷாருக் கான் எழுந்த பண்ட்டை உட்காரச் சொன்னார். இதுவும் ரசிகர்களை கவர்ந்தது.. முன்னதாக ரிஷப் பண்ட் அடித்த நோ லுக் சிக்ஸரை பார்த்து எழுந்து நின்று கைதட்டினார் ஷாருக் கான்.