உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவரை பாஜக பிரமுகர்கள் கொடூரமாகத் தாக்கிய வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவின் குர்சி சாலை பகுதியில் பூரன் சிங் அதிகாரி என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரரை, பாஜக மாநகர ஒருங்கிணைப்பாளர் சேத்தன் பிஷ்ட் மற்றும் முன்னாள் மண்டல தலைவர் கே.பி. சிங் ஆகியோர் வழிமறித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். நடுரோட்டில் அந்த வீரரை கீழே தள்ளி, மிருகத்தனமாக எட்டி உதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “எல்லை காத்த வீரனுக்கு சொந்த மண்ணில் இதுதான் மரியாதையா?” எனப் பொதுமக்கள் ஆவேசமாக கேள்வி எழுப்புகின்றனர்.

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, சீருடை அணிந்து தேசத்தைப் பாதுகாத்த ஒருவரை அசிங்கப்படுத்திய இந்த ‘அதிகார அராஜகம்’ மனிதாபிமானத்தை மட்டுமன்றி, ராணுவத்தின் கண்ணியத்தையும் இழிவுபடுத்தியுள்ளதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேசப்பற்றாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.