அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத நிலையில் அது பற்றி அவரிடம் கேட்டபோது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார். அதன்பிறகு எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்ட விழா சமீபத்தில் நடைபெற்ற போது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆட்சியை புகழ்ந்து பேசிய செங்கோட்டையன் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை சொல்லவில்லை. இதன் காரணமாக தற்போது அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்பி உதயகுமார் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவமாக திகழ்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை மீட்டெடுத்து காப்பாற்றியது எடப்பாடி பழனிச்சாமி தான். இந்த உண்மையை களத்தில் மக்களை சந்தித்த நாங்கள் சொல்வோம். எடப்பாடி பழனிச்சாமி எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு இயக்கத்தின் எதிர்காலத்தை மக்கள் சக்தி தான் தீர்மானிக்க முடியும். எந்த சக்தியாலும் அதிமுகவுக்கு சேதத்தை ஏற்படுத்த முடியாது. எடப்பாடி பழனிச்சாமி விவேகத்துடன் செயல்பட்டு 4 வருட ஆட்சியை சிறப்பாக நடத்தி முடித்தார். தொண்டர்கள் மிகவும் மன வலிமையுடன் அதிமுகவுக்கு வரும் சோதனைகளை எதிர் கொள்ள வேண்டும். அதிமுகவை எதிரிகள் மற்றும் துரோகிகளின் வாதங்களால் அசைந்து கூட பார்க்க முடியாது என்று கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் ஆர்பி உதயகுமார் இந்த வீடியோவை  வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.