
உத்தரபிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தின் சரவா கிராமத்தில், புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், தனது காதலனுடன் வீட்டிலிருந்து ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 50 நாட்களுக்குப் பிறகு, குடும்பத்தினருக்கு லஸ்ஸியில் தூக்க மாத்திரைகள் கலக்கி கொடுத்துவிட்டு அந்த பெண், நகையும் பணத்தையும் எடுத்துவிட்டு, நள்ளிரவில் காதலனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சரவா கிராமத்தைச் சேர்ந்த ஆரிஃப் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது சகோதரர் சல்மான் (தச்சுப் பணி செய்பவர்) ஏப்ரல் 25-ஆம் தேதி லோனி பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண், வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் அனைவருக்கும் அன்புடன் லஸ்ஸி வழங்கினார்.
அந்த லஸ்ஸியில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்ததால், மாமனார், மாமியார், கணவர், மைத்துனர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட அனைவரும் மயங்கி உறங்கிவிட்டனர்.
அடுத்த நாள் காலை 7 மணிக்கு, வீட்டின் கதவு திறந்திருந்ததை அருகிலுள்ளவர்கள் கவனித்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, சல்மானின் மனைவியைக் காணவில்லை. மேலும், வீட்டிலிருந்த ₹44,500 பணம் மற்றும் லட்சக்கணக்கில் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.
தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த குடும்பத்தினர், நள்ளிரவு 12:30 மணிக்கு, ஒரு இளைஞர் பைக்கில் வந்துத் திருமணமான பெண்ணை அழைத்துச் செல்லும் காட்சியை கண்டனர். இது தெளிவான திட்டமிடப்பட்ட மோசடியாக கருதப்படுகிறது.
இது குறித்து கோட்வாலி போலீசார், திருமணமான பெண் மற்றும் அவரது அடையாளம் தெரியாத காதலன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமை நிர்வாக அதிகாரி ஜிதேந்திர குமார் சர்மா கூறுகையில், “இவர்கள் இருவரையும் விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார்.
“அவள் எப்போதும் நன்றாக, சிரித்த முகத்துடன் நடந்து கொண்டவள். எதையும் சந்தேகிக்க வைக்கும் அளவுக்கு ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை,” என மாமனார் நன்னே கூறினார்.
அவரது லஸ்ஸி வழங்கும் அன்பும், செயலிலும் உண்மையை உணரமுடியாத அளவுக்கு, திட்டமிட்டு குடும்பத்தினரை துரோகம் செய்துள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் ஊரிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.