தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த மாபெரும் தொலைநோக்குச் சிந்தனையாளரும், ‘இயக்குநர் இமயம்’ என்று ஒட்டுமொத்தத் திரையுலகால் போற்றப்படுபவருமான மூத்த இயக்குநர் பாரதிராஜா (84) அவர்கள், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.
அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஷால் அவர்கள், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மிகவும் நீளமான, நெஞ்சை உருக்கும் உருக்கமான இரங்கல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
‘பாண்டிய நாடு’ திரைப்படத்தில் பாரதிராஜாவுடன் தந்தை-மகனாக இணைந்து நடித்த நினைவுகளைப் பகிர்ந்த விஷால், அவருடன் கழித்த ஒவ்வொரு தருணத்தையும் ஒரு பொக்கிஷமாகப் போற்றுவதாகவும், எப்போதும் ஒரு இளைஞரைப் போலத் துடிப்புடனும், புன்னகையுடனும் வலம் வந்த பாரதிராஜா தனக்கு மிகப்பெரிய உத்வேகமாகத் திகழ்ந்தார் என்றும் கண்ணீரோடு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு அற்புதமான திரையனுபவத்தைத் தந்த ஒரு மாபெரும் சகாப்தம் பாரதிராஜாவின் மறைவுடன் முடிவுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள விஷால், இந்த சோகமான இக்கட்டான தருணத்தில் ஒரு அதிரடியான கௌரவ முடிவை எடுத்துள்ளார். தான் முதன்முறையாக இயக்குநராக அவதாரம் எடுத்து இயக்கியுள்ள தனது முதல் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகவிருந்த நிலையில், அந்த டீசர் வெளியீட்டை விஷால் உடனடியாக ஒத்திவைத்துள்ளார்.
Shocking and sad to hear the news about our legendary filmmaker, Iyakunarimayam Bharathiraja sir passing away and leaving us all this morning.
A visionary who changed the landscape of Tamil cinema forever, he brought the soul of our villages, our people and our emotions to the…
— Vishal (@VishalKOfficial) June 10, 2026
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கதைசொல்லியை இழந்து வாடும் இந்த நேரத்தில், தனது படத்தின் டீசரை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது என்றும், அதே திரையுலகைச் சேர்ந்த ஒருவனாக இயக்குநர் இமயத்திற்குச் செலுத்தும் மரியாதையாக இதை ஒத்திவைப்பதே தான் செய்யக்கூடிய குறைந்தபட்ச செயல் என்றும் விஷால் நெகிழ்ச்சியோடு அறிவித்துள்ளார். பாரதிராஜாவை இழந்து தவிக்கும் அவரது மனைவி, மகள் ஜனனி மற்றும் குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமையை அளிக்க வேண்டும் என விஷால் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
