
தூத்துக்குடி மாவட்டம் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த ராஜ் (56) என்பவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சிபுரம் மேற்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக வசித்து வந்தார். ராஜ் என்பவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில், இரண்டாவது மகன் ஜேம்ஸ் (33), தனது மனைவியுடன் தூத்துக்குடி அண்ணா நகரில் வசித்து வருகிறார். ஜேம்ஸ் அடிக்கடி மது அருந்தி வந்ததால், பெற்றோருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தான் முதலில் பெற்றோர் பகுதியில் தனியாக குடியிருந்தனர். ஆனால் அங்கு வந்தும் ஜேம்ஸ் பிரச்சனை செய்ததால், பெற்றோர் கடந்த 6 மாதங்களுக்கு முன் மகிழ்ச்சிபுரம் பகுதியில் குடியேறினர். இந்நிலையில், ஜேம்ஸ் இரண்டு நாட்களுக்கு முன்பு மகிழ்ச்சிபுரம் வந்து தனது மனைவியிடம் தவறான எண்ணத்துடன் பேசினாயா என தந்தை ராஜிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த ராஜை தெருவில் வழிமறித்த ஜேம்ஸ், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி கொலை செய்து தப்பி ஓடியுள்ளார்.
சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் சிப்காட் காவல் நிலையத்தில் தகவல் அளிக்க, போலீசார் விரைந்து வந்து ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் ஜேம்ஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.