ஹரியானா மாநிலம் குருகிராமின்  சாலையில் நடந்து சென்ற பாதசாரி ஒருவரின் காலில் கார் ஒன்று ஏறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், காரை ஓட்டி வந்த பெண்ணிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆனால், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, அந்தப் பெண் காரில் இருந்தபடியே அந்த நபரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், சாலையில் நடந்து சென்றதற்காக அந்த நபரையே குற்றம் சாட்டியதுடன், “என் கணவர் போலீசில் இருக்கிறார்” என்று கூறித் தனது அதிகாரப் பின்னணியைப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.

 

இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்ய, அது தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்ததோடு மட்டுமில்லாமல், காவல்துறை செல்வாக்கைப் பயன்படுத்திச் சாதாரண மக்களை அச்சுறுத்த முயன்ற அந்தப் பெண்ணின் ஆணவப் போக்கிற்கு நெட்டிசன்கள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தி, அந்தப் பெண் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.