இந்தியாவில் உள்ள ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞர்கள் நகைச்சுவை என்ற பெயரில் மேடையில் ஆபாசமாகவும் எல்லை மீறியும் பேசுவதாக சமீபகாலமாக பரவலான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பிரணித் மோரே மற்றும் மதுர் விர்லி ஆகியோரின் வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது பிரபல பெண் நகைச்சுவை கலைஞரான ஐஸ்வர்யா மோகன்ராஜின் பழைய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ‘காமிஸ்தான்’ (Comicstaan) நிகழ்ச்சியில் அவர் பேசிய அந்த வீடியோவில், “என் அம்மாவிற்கு ஆண்களைப் பிடிக்காது.

என் தம்பி பிறந்தபோது அவனது பிறப்புறுப்பை வெட்ட வேண்டும் என்று அம்மா நினைத்தார்; அதைச் செய்ய முடியாததால் அவர் அழுதார். எதிர்காலத்தில் எனக்கு ஒரு மகன் பிறக்கும்போது என் அம்மாவின் அந்த ஆசையை நான் நிறைவேற்றுவேன்” என்று ஐஸ்வர்யா மோகன்ராஜ் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை மையமாக வைத்து, ஆண் மற்றும் பெண் நகைச்சுவை கலைஞர்களுக்கு சமூகத்தில் தனித்தனி விதிகள் உள்ளனவா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். ஒரு ஆண் கலைஞர் பெண் குழந்தையைப் பற்றி மேடையில் இதுபோன்று பேசியிருந்தால், இந்நேரம் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது நகைச்சுவை அல்ல, ஆண்களுக்கு எதிரான வெறுப்புணர்வின் உச்சக்கட்டம் என்றும், பெண்ணியவாதிகளின் இரட்டை நிலையை இது காட்டுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியாவில் ஒரு பெண் கலைஞர் சிறுவனின் உடல் உறுப்பை வெட்டுவது பற்றி மேடையில் பகிரங்கமாகப் பேச முடிகிறது, ஆனால் ஆண் கலைஞர்கள் பரஸ்பர சம்மதத்துடன் நடக்கும் உறவுகளைப் பற்றிப் பேசினாலே பெரிய சர்ச்சை ஆக்கப்படுக்கிறது என்று நெட்டிசன்கள் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.