கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே குருந்தன்கோடு காடேற்றி பகுதியில் கிராமசுப்பு (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மரவேலை செய்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இவர்களது மூத்த மகன் இசக்கி முத்துக்குமாருக்கு 33 வயது ஆகும் நிலையில் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கடந்த சில மாதங்களாகவே வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இவரது அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து கதவை தட்டினர். ஆனால் அவர் கதவை திறக்காததால் பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல் துறையினர் சோதனை செய்ததில் அவர் எழுதிய ஒரு தற்கொலை கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் என்னை இரண்டு பேய்கள் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்கிறது. எனவே நான் அதனுடன் செல்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. இதில் முத்துக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்த நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.