
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நடத்தும் கூட்டங்களில் உட்க்கட்சி பூசல்கள் என்பது அதிகரிப்பதும் கட்சி நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்படுவதும் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கிறது.அந்த வகையில் சென்னையில் நடந்த ஒரு ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கட்சியில் தான் புறக்கணிக்கப்படுவதாக ஆதங்கத்தை கொட்டி தீர்த்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தின் போது கோகுல இந்திரா பேசியதாவது, என்னை பார்த்தாலே கையெடுத்து கும்பிட சிலர் பயப்படுகிறார்கள். என்னை பார்த்தவுடன் பலர் பயப்படுகிறார்கள். என்னுடைய போட்டோவை கார்னரில் போட கூட பயப்படுகிறார்கள். இதை எல்லோரும் தவிர்க்க வேண்டும்.
இப்போது சொல்கிறேன் யார் வேண்டுமானாலும் வரலாம். யாரை வேண்டுமானாலும் பொதுச் செயலாளர் தேர்வு செய்யலாம். சீட் வேண்டும் என்பதற்காக யாரும் கேட்கலாம். இதை நான் யாருடைய மனதும் புண்பட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. என்னை தென்சென்னை பொறுப்பாளராக பொதுச்செயலாளர் நியமித்த பிறகு நிறைய பேர் அழைப்பார்கள். ஆனால் பொதுச்செயலாளர் போட்ட உத்தரவுக்கு மாறாக தென் சென்னை மற்றும் அண்ணா நகர் தொகுதிகளில் நான் தேர்தல் பணிகளில் தலையிட்டது கிடையாது. நாம் மூக்கை நுழைக்க கூடாது நாம் தலையிடுவதால் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதால் ரொம்ப ரொம்ப நாகரிகமா ஒதுங்கிக் கொண்டேன்.
நான் யாருக்கும் கொடுப்பதும் கிடையாது குரூப்பிசம் செய்வதும் கிடையாது. எங்களைப் பார்த்தால் எங்களிடம் பேசினால் எங்கள் போட்டோவை போட்டால் கட்சி பதவி பறிபோய்விடும் என்ற எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். நான் தென் சென்னையில் 4 மாவட்ட செயலாளர்களுடன் பணியாற்றியுள்ள நிலையில் என்னால் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு அல்லது இடையூறு ஏற்பட்டுள்ளதா.? யாரை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்பது பொதுச் செயலாளரின் முடிவு தான். நான் சீட் கேட்கவில்லை. அப்படி நான் எதிர்பார்க்கும் நிலையில் என்னுடைய பெயரை போஸ்டரில் போடக்கூடாது என்னுடைய பெயரே தெரியக்கூடாது என்று நினைக்கிறார்கள். மேலும் இந்த கூவத்தின் வெள்ளத்தில் கழுத்தளவு தண்ணீரில் உங்களோடு உங்களாக நின்ற என்னை மறக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது என்று கூறினார்.