இந்திய இரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கும் பயணி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரயிலின் குறுகலான நடைபாதையில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், உரிய பயணச்சீட்டு இன்றி பயணிப்பதாகக் கூறி இரண்டு டிக்கெட் பரிசோதகர்கள் ஒரு பயணியின் சட்டையைப் பிடித்து இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் “என்னைத் தொடாதீர்கள், என்னிடம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் உள்ளது” என்று அந்தப் பயணி உரக்கக் கத்திய போதிலும், பரிசோதகர்கள் அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு அபராதம் செலுத்தும்படி வற்புறுத்தியதுடன், அடுத்த நிலையத்தில் காவலர்களிடம் ஒப்படைப்பதாக எச்சரித்தனர்.

“>

இந்தக் காணொளி இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் மத்தியில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன. அரசு ஊழியர்கள் பொதுமக்களை இதுபோன்று உடல் ரீதியாகக் கையாள்வது தவறானது என்றும், ஒருவேளை அவர் டிக்கெட் இல்லாமல் பயணித்திருந்தால் முறைப்படி அபராதம் விதித்திருக்க வேண்டுமே தவிர, சட்டையைப் பிடித்து இழுப்பது அநாகரீகமானது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில், டிக்கெட் இன்றி பயணிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் ஒருபுறம் முன்வைக்கப்படுகிறது. இந்த மோதல் குறித்து இரயில்வே நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதையும் அளிக்கவில்லை.