பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ்பெற்ற பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தின்  தாய் மற்றும் சேய் நலப் பிரிவில் அதிகாலையில் திடீரென எதிர்பாராத விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு மற்றும் பழுதடைந்த ஏசியின் காரணமாக திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் கோரத் தாக்கத்தால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டுத் தவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வெளியே கூடித் தங்களது குழந்தைகளை மீட்டுத் தருமாறு கதறி அழுத காட்சி காண்போரின் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது. குறிப்பாக, ஜாவேரியா என்ற துயரமடைந்த தாய் ஒருவர் தனது குழந்தையைக் காப்பாற்றுமாறு கண்ணீருடன் கதறிய வார்த்தைகள் இணையத்தில் வைரலாகிப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் பிறந்த சில நாட்களே ஆன 14 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாகத் தீயில் கருகி உயிரிழந்ததாகப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், தீ விபத்து ஏற்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகமும் மீட்புக் குழுவினரும் உரிய நேரத்தில் விரைந்து வந்து செயல்படவில்லை எனக் கூறி கொதித்தெழுந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ள காவல்துறையினர், மருத்துவமனையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஏசி பழுது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்தில் சேர்ப்போம் என்று நம்பி அழைத்து வந்த இடத்தில், அலட்சியத்தால் நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.