உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், நள்ளிரவு 1 மணி அளவில் 7 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக ஆன்லைனில் ரேபிடோ (Rapido) பைக் புக் செய்த விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. நள்ளிரவில் வந்த புக்கிங்கை பார்த்துவிட்டு, லொகேஷனைக் கேட்பதற்காக அந்த ரேபிடோ பைக் ரைடர் போன் செய்துள்ளார்.

அப்போது எதிர்முனையில் பேசிய சிறுவன், “எனக்கு பக்கத்துல இருக்குற லேண்ட்மார்க் எதுவும் தெரியாது, எனக்கு 7 வயசு தான் ஆகுது” என்று மழலை மாறாமல் சொல்ல, அதிர்ந்துபோன ரைடர், “7 வயசா? அப்புறம் ஏன்டா தம்பி இந்த நள்ளிரவு 1 மணிக்கு பைக் புக் பண்ணுன?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன், “எனக்கு டீ குடிக்கணும்.. எங்க அப்பா தூங்குறாரு!” என்று கூலாகக் கூற, பைக் ரைடர் அப்படியே உறைந்துபோய் விட்டார்.

​சிறுவனின் பதிலை கேட்டு மிரண்டுபோன அந்த பொறுப்பான ரேபிடோ ரைடர், சற்றும் தாமதிக்காமல், “நீ சின்ன பையன், இப்ப மணி நள்ளிரவு 1 ஆகுது.. நான் இந்த ரைடை கேன்சல் பண்ணுறேன், முதல்ல போய் உங்க அப்பா கூட படுத்துத் தூங்கு” என்று புத்திமதி கூறிவிட்டு புக்கிங்கை ரத்து செய்துள்ளார். இந்த சுவாரசியமான உரையாடல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

நள்ளிரவில் சமயோசிதமாகச் செயல்பட்டு சிறுவனை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய ரேபிடோ ரைடருக்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளைக் குவித்து வரும் அதேவேளையில், ஸ்மார்ட்போன்களை நள்ளிரவில் பிள்ளைகள் கைகளில் படாதவாறு பெற்றோர்கள் எவ்வளவு உஷாராக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான விவாதத்தையும் இந்த சம்பவம் கிளப்பியுள்ளது.