தர்மபுரி மாவட்டம் ஏரிக்கோடி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தம் (21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஆனந்தம் தனது தாயாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு உடம்பு சரி இல்லை வீட்டிற்கு புறப்பட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுள்ளார்.பின்பு 2 மணி நேரம் கழித்து தனக்கு உடல்நலம் சரியில்லை என்று ஆசிரியரிடம் கூறிவிட்டு அவரது விடுதிக்கு சென்று விட்டார்.

இதனையடுத்து கல்லூரி முடிந்தவுடன் அவருடைய நண்பன் அவரை பார்ப்பதற்கு விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது அறை உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவருடைய நண்பர் கதவை நீண்ட நேரமாக தட்டிப் பார்த்தார். கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவர் அருகில் உள்ளவர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஆனந்தம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.