இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதனால் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயத்தில் ஆன்லைன் மோசடிகளால் ‌ யுபிஐ பணம் பரிவர்த்தனைகளை பயன்படுத்துபவருக்கு பண மோசடி தொடர்பான அச்சுறுத்தல்களும் இருக்கிறது. அந்த வகையில் யுபிஐ பயன்படுத்துபவர்கள் மற்றும் சில பெண்களை குறி வைத்து புதிய வகை மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். அதாவது google pay உள்ளிட்ட செயலிகள் மூலம் தெரியாத நம்பர்களில் இருந்து முதலில் பணம் அனுப்பப்படும். அவர்கள் வேண்டுமென்றே பணத்தை அனுப்பிவிட்டு தெரியாமல் அனுப்பிவிட்டதாக கூறி அந்த பணத்தை மீண்டும் திரும்ப அனுப்புமாறு கூறுவார்கள். ஒருவேளை அதை உண்மை என நம்பி நீங்கள் பணத்தை அனுப்பி விட்டால் உங்களுடைய அக்கவுண்டை ஹேக் செய்து வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுவார்கள்.

எனவே இது போன்ற மோசடிக்காரர்களிடமிருந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக பெண்களை குறி வைத்து தான் இந்த வகை மோசடிகள் அதிக அளவில் நடப்பதாக கூறப்படுகிறது. அதாவது முதலில் பெண்கள் பணத்தை அனுப்பும் போது அவர்களுடைய மொபைல் நம்பர் அவர்களுக்கு கிடைத்துவிடும். இதனை வைத்து அவர்களை மோசடி செய்வது மற்றும் தவறான முறையில் அவர்களிடம் நடந்து கொள்வது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். எனவே இதுபோன்ற அழைப்புகள் ஏதேனும் வந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.