சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுஹைல் என்பவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுமையா என்பவருக்கும் கடந்த 16ஆம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சேலத்தை சேர்ந்த கதீஜா என்ற பெண் சென்றுள்ளார்.

அவர் திருமண மண்டபத்தில் தங்கி இருந்தபோது அவர் அணிந்திருந்த 21 பவுன் தங்க நகைகளை அறையில் உள்ள பீரோவில் வைத்துள்ளார்.‌ மறுநாள் காலை பீரோவை திறந்து பார்த்தபோது அங்கிருந்த நகைகள் காணாமல் போயிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கதீஜா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த  விசாரணையில் மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது  2 இளைஞர்கள் அதிகாலை மண்டபத்திற்குள் நுழைந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

அதில் ஒருவர் சேலத்தை சேர்ந்த கிஷோர் என்பதும் அவர் கதீஜா உடன் தங்கியிருந்த அவரது உறவு பெண்ணான ஷீபா என்ற பெண்ணை காதலித்து வந்ததும் தெரியவந்தது. பின்பு ஷீபாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது காதலன் கிஷோரை வரவழைத்து கதீஜா நகைகளை திருட உதவி செய்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஷீபா, கிஷோர் மற்றும் கிஷோரின் தந்தை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்பு கைது செய்த 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.