இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. இணையதளங்களில் மக்களை கவரும் விதமாக போலி விளம்பரங்களை வெளியிட்டு  மக்களை ஏமாற்றுகிறார்கள். அதோடு  செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், பகுதி நேர வேலை, டிஜிட்டல் அரஸ்ட் என்றெல்லாம் கூறி மோசடி சம்பவங்கள் அரங்கேறுகிறது. இது போன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் மக்கள் சில மோசடி வேலைகளை நம்பி ஏமாந்து பணத்தை இழந்து தவிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் பெங்களூருவில் நடந்துள்ளது. அதாவது ஒரு 24 வயது இளம் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு ஜோதிடர் அறிமுகமானார். அவருடைய instagram பக்கத்தில் அகோரி பாபா புகைப்படம் ‌ ஜோதிடம் உள்ளிட்ட விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது. இவரை அந்த இளம் பெண் தானாக சென்று தொடர்பு கொண்ட நிலையில் அவர் தன்னை விஜயகுமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இருவரும் வாட்ஸ் அப்பில் பேசியபோது அந்த பெண்ணின் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருப்பதாக கூறி சில சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை நம்பி முதலில் அந்த பெண் 1820 ரூபாயை கொடுத்த நிலையில் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பலவாறு கூறி பணத்தை பெற்றுக் கொண்டே இருந்தார். மொத்தமாக இளம்பெண் 6 லட்ச ரூபாய் வரை அவருக்கு அனுப்பி விட்ட நிலையில் பின்னர் தான் ஏமாற்றப்பட்டமோ என்று நினைத்த அந்தப் பெண் தான் கொடுத்த பணத்தை கேட்க அவரோ 13 ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து அவருக்கு வழக்கறிஞர் என்ற ஒருவர் அறிமுகமானதோடு பணத்தை கேட்பதால் ஜோதிடர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறுவதாக இளம் பெண்ணிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இளம் பெண் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் ஜோதிடர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் போலி என்பதும் ‌இளம்பெண்ணை அவ்வாறு கூறி மோசடி செய்து பணத்தை பறித்ததும் தெரிய வந்த நிலையில் இது தொடர்பாக விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.