கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு  அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் கருணாநிதி ஆட்சியில் போராடி வாதாடி இன்று  தமிழ்நாட்டில் 36 மருத்துவ கல்லூரிகள் இருக்கிறது. இதனைக் கொண்டு வந்தவன் வேல்முருகன். கூத்தாடி என்றால் உங்களுக்கு குறைந்துவிட்டது என்று கூறுகிறீர்கள். கூத்து என்பது தமிழனின் மரபு வழி கலையாகும். இதில் உங்களுக்கு என்ன குறைச்சல். எந்த நடிகராக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன.? வேல்முருகன் ஆற்றிய பங்களிப்பு என்ன.? இது பற்றி நான் ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

போராளிகளைப் பற்றி மைக்கை கொடுத்து கேட்டால் அவர்களுக்கு தெரியாது. ஆனால் எங்கள் அண்ணனை விமர்சித்து விட்டீர்கள் என்று கூறுகிறார்கள். உங்கள் அண்ணனை மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோர் கூட தவறு செய்யும் போது அதனை தவறு என்று சுட்டிக்காட்டியவன் நான். ரஜினி மற்றும் விஜயகாந்த் ரசிகர்களை விட நீங்கள் என்ன பெரிய ஆளா.? இவர்கள்தான் மாணவர்களை ஊக்கப்படுத்தி பரிசுகள் கொடுக்கிறார்களாம். தமிழ்நாட்டில் பாலா என்பவர் துணை நடிகரோ அல்லது கதாநாயகனோ அல்ல. அவர்தான் சம்பாதிக்கும் பணத்தை ஏழை மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது வீடுகள் கட்டிக் கொடுப்பது என பல உதவிகள் செய்து வருகிறார். அவர் ஷூட்டிங் நடத்துவது கிடையாது சோ நடத்துவது கிடையாது.

அதேபோன்று நடிகர் ராகவா லாரன்ஸ் ஏராளமான முதியோர் இல்லத்திற்கு உதவி புரிகிறார். அவரும் சூட்டிங் நடத்தவில்லை ஷோ நடத்தவில்லை. அரசியலுக்கு வந்து மக்களோடு நில்லுங்கள். நீங்கள் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுக்கிறீர்கள். மேலும் கடலூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் எதிர்கால இந்தியாவின் அப்துல் கலாமாக வரவேண்டும் என்பதற்காக பத்திரிக்கை இல்லாமல் செல்பி எடுக்காமல் ஒரு புகைப்படக்காரர் கூட இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் நிதி அறிவித்து அவர்களுடைய விஞ்ஞான கல்விக்காக உதவியவன் நான் என்று கூறினார்.