ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமூகம் பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் வீரப்பன் சத்திரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்த நிலையில் மேடையில் பேசுவதற்கு தயாராக இருந்தார். அப்போது அந்த பகுதியில் திமுகவினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதால் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 7 பேரின் மண்டை உடைந்தது. இதன் காரணமாக அடிபட்ட 7 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடியடி நடத்தி தகராறு செய்தவர்களை அங்கிருந்து கலைத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த தகராறு காரணமாக சீமான் மேடையில் பேசாமல் அங்கிருந்து பாதியிலேயே கிளம்பி சென்றார்.