அமெரிக்காவுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாகிஸ்தான் வந்தடைந்துள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், உலகையே உலுக்கும் வகையிலான ஒரு உருக்கமான புகைப்படத்தைப் பகிர்ந்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 28 அன்று மினாப் நகரில் உள்ள பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 160-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகளின் நினைவாக, விமான இருக்கைகளில் அவர்களின் இரத்தக்கறை படிந்த பைகள், காலணிகள் மற்றும் புகைப்படங்களை அடுக்கி வைத்து, “இவர்கள் தான் எனது பயணத் தோழர்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.

“>

பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லும் முன்பே, ஈரானுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், ஆறாத வடுக்களையும் உலக நாடுகளின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ள இந்தச் செயல், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் இருந்து உரையாற்றிய காலிபாஃப், அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான் நேர்மையாகப் பங்கேற்றாலும், அமெரிக்காவை ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை என்பதைத் தெள்ளத்தெளிவாகக் கூறினார்.

“>

ஒரே ஆண்டில் இரண்டு போர்களைச் சந்தித்த கசப்பான அனுபவங்கள் இருப்பதால், அமெரிக்கா தனது முன்நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே முறைசார்ந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என ஈரான் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

பாதுகாப்பு, இராணுவம் மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவுடன் வந்துள்ள ஈரான், தனது இறையாண்மையிலும் பாதுகாப்பிலும் சமரசம் செய்யப்போவதில்லை என்பதை இந்தத் தொடக்கமே பறைசாற்றுகிறது.