பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனை சந்திக்க பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். இதனால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த பெண்ணின் கணவர் கோரிக்கை விடுத்த நிலையில் குலாம் பொய் சொல்வதாகவும் தான் இந்தியாவிலேயே வாழ விரும்புவதாகவும்  கூறியதோடு தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் சீமா கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் சீமாவின் முதல் கணவர் குலாம் ஹைதர் பாகிஸ்தானில் உள்ள யூடியூப் சேனல் ஒன்றுக்கு  பேட்டி அளித்த போது, “சீமா நான் உன்னை இன்னும் காதலிக்கிறேன், எப்போதும் போல் காதலிப்பேன். உன்னையும் குழந்தைகளையும் ரொம்ப மிஸ் பண்றேன். இந்தியாவில் உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள். நீ மீண்டும் பாகிஸ்தான் வந்துவிடு. உன்னை யாரும் எதுவும் சொல்லாமல் நான் பார்த்துக் கொள்வேன்” என கேட்டுக் கொண்டுள்ளார்.