
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை கணிசமாகக் குறைந்துவருகிறது. இந்த சூழலில், திருமணத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பல மாகாணங்களில் திருமண விடுப்பு 3 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள்தொகையை சமநிலையில் வைத்திருக்க, திருமணங்களை அதிகரித்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே சிச்சுவான், ஷான்டாங், ஷான்சி, கன்சு உள்ளிட்ட மாகாணங்களில் இந்த விடுப்பு நீட்டிப்பு நடைமுறையில் உள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் 20 நாட்கள் விடுப்பும், மருத்துவ பரிசோதனை செய்தவர்கள் கூடுதலாக 5 நாட்கள், என மொத்தம் 25 நாட்கள் முழு சம்பளத்துடன் விடுப்பு பெற முடியும்.
அதே போல ஷான்டாங் மாகாணத்தில் திருமண விடுப்பு 18 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ஷான்சி, கன்சு ஆகிய மாகாணங்களில் இது 30 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சீன மத்திய அரசின் விதிப்படி 1980ஆம் ஆண்டு முதல் 3 நாட்கள் மட்டுமே திருமண விடுப்பு வழங்கப்படும் என்ற ஒழுங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது 2025 முதல் காலாண்டு புள்ளிவிவரப்படி, சீனாவில் 1.81 மில்லியன் ஜோடிகள் மட்டுமே திருமண பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு இல்லாத அளவுக்கு 8% குறைவாகும்.
இளைய தலைமுறையினர் குழந்தை பெறும் விருப்பம் இல்லாத காரணத்தால் திருமணத்தையே தள்ளிப்போடுகிறார்கள். மேலும், தொழில்நெருக்கம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தின் மேல் விருப்பம் போன்ற காரணங்களும் இதற்குக் காரணமாக உள்ளன.
இதைத் தடுக்கும் வகையில் சீன அரசு திருமண பதிவு நடைமுறையை எளிதாக்கியுள்ளது. இப்போது ஹுகோ (வீட்டுப் பதிவு) இல்லாமலும் திருமணம் பதிவு செய்ய முடியும்.
மகப்பேறு மற்றும் தந்தைவழி விடுப்புகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வேலை வாய்ப்பு பாதுகாப்பு மற்றும் சம்பள உறுதித்தேவை காரணமாக, இந்த விடுமுறைகள் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. அதனையடுத்து, நிறுவனங்களுக்குத் தேவையான நிதி உதவிகள் அளிக்கவும் அரசு பரிசீலனை செய்து வருகிறது.