இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு செயலியாக விளங்கும் வாட்ஸ்அப், தனது பயனர்களுக்காகத் தொடர்ச்சியாகப் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் யுபிஐ மூலம் பயனர்கள் நேரடியாகத் தங்கள் மொபைல் போன்களை ரீசார்ஜ் செய்து கொள்ளும் ‘சூப்பர் அப்டேட்’ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் மட்டும் சுமார் 51 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப், தகவல் பரிமாற்றத்தைத் தாண்டி, அன்றாடத் தேவைகளுக்கான ஒரு தளமாகவும் உருவெடுத்து வருகிறது. ஏற்கனவே பணப் பரிமாற்ற வசதி உள்ள நிலையில், இந்த ரீசார்ஜ் வசதி பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி நிறுவனங்களின் சிம் கார்டுகளைப் பயன்படுத்துவோர், வாட்ஸ்அப் தளத்திலேயே தங்களுக்குத் தேவையான திட்டங்களைத் தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பிஎஸ்என்எல் பயனர்களுக்கும் இந்த வசதி விரைவில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இனி ரீசார்ஜ் செய்வதற்காகத் தனியாக மற்ற செயலிகளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதால், இது நேரத்தைச் சேமிப்பதோடு மிகவும் எளிமையானதாகவும் இருக்கும். மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ள இத்தகைய மாற்றங்கள், வாட்ஸ்அப்பை ஒரு முழுமையான டிஜிட்டல் சேவைத் தளமாக மாற்றி வருகின்றன.
