திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணிநடைபெற உள்ளதால் வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயில்கள் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை விரைவு ரயில் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் ஆகஸ்டு 1ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும். கோவை மற்றும் மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரயில் இரண்டு மார்க்கமாகவும் ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

திருச்சியில் இருந்து தஞ்சாவூர்,மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளன. திருச்சி – அகமதாபாத் செல்லும் விரைவு ரயில் ஜூலை 30-ஆம் தேதியும், மதுரை -சென்னை எழும்பூர் தேஜஸ் விரைவு ரயில் ஆகஸ்ட் 1ஆம் தேதியும் பொன்மலையிலிருந்து புறப்பட்டு செல்லும். காச்சிக்கூட மற்றும் மதுரை விரைவு ரயில் ஜூலை 31ஆம் தேதி விழுப்புரம் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.