உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அலிவர்திபூர் கிராமத்தில் ஈத் பண்டிகைக்காக வந்த 11 வயது சிறுமி டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத்தில் வசிக்கும் அலாஃபியா என்ற அந்தச் சிறுமி, ஈத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அத்தையின் வீட்டுக்கு வந்துள்ளார்.

திங்கள்கிழமை காலை சுமார் 11 மணியளவில், தெருவில் தனது உறவினருடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாகச் சிறுமி மீது ஏறியது.

அந்தக் குறுகிய சந்தில் நின்றிருந்த டிராக்டரை அதன் டிரைவர் திடீரென இயக்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து சிறுமியின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த அலாஃபியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய டிரைவர் டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய பண்டிகை நாளில், ஒரு சிறுமியின் மரணம் அந்தத் தெருவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தப்பியோடிய டிரைவரைப் பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.