மகாராஷ்டிர மாநிலம் ஒரு பகுதியில் மக்கும் கழிவுகளைச் சேகரிக்காமல் அலட்சியம் காட்டிய நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, இளைஞர் ஒருவர் கழுத்தில் கோழிக்கால்களால் ஆன மாலையை அணிந்து கொண்டு, தலைமை அதிகாரி அறைக்கு வெளியே கோழிக் கழிவுகளைக் கொட்டிப் போராட்டம் நடத்திய விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யஷ் ஜங்லே என்ற இளைஞர், தங்கள் பகுதியில் சாலையோரம் கடை அமைத்துள்ள அனுமதியற்ற கோழி வியாபாரிகள் தங்களின் மக்கும் கழிவுகளை நேரடியாகச் சாக்கடையில் கொட்டுவதாகவும், இதனால் அப்பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த யஷ் ஜங்லே,  தனது கழுத்தில் கோழிக்கால்களால் ஆன மாலையை அணிந்து கொண்டும், ஒரு பையில் கோழிக்கூடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்கும் கழிவுகளை எடுத்துக்கொண்டும் நகராட்சி அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த தலைமை அதிகாரியின் அறைக்கு வெளியே அந்தப் பையில் இருந்த கழிவுகளை நேரடியாகக் கொட்டியதால் நகராட்சி அலுவலகம் முழுவதும் கடுமையான துர்நாற்றம் பரவியது.

<a href=”http://

“>

அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் கடந்த அரை மணி நேரத்திற்கு முன்பு எடுத்த புகைப்பட ஆதாரங்களை நீட்டி ஆவேசமாகப் பேசிய அவர், “நான் ஒரு மாதமாகப் போராடிக் கொண்டிருக்கிறேன், இந்த நாற்றத்தில் நாங்கள் எப்படி வாழ்வது என்று சொல்லுங்கள்? நாங்கள் தான் இந்தத் துர்நாற்றத்தில் வாழ்கிறோம் என்றால், தாங்கள் வாழும் நிலைமைகளை நகராட்சி அதிகாரிகளும் ஒரு மாதமாவது அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தேன்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார். இந்த வினோத போராட்டத்தால் நகராட்சி அலுவலகத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.