இந்திய எல்லைப் பாதுகாப்பு வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் கொண்ட பிஎஸ்எப் (BSF) குழு பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக நேரடியாக தாக்குதல் நடத்தி, வெற்றிகரமாக பதிலடி வழங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் பகுதியில், உதவி கமாண்டன்ட் நேஹா பண்டாரி தலைமையில் செயல்பட்ட இந்த பெண் பிஎஸ்எப் குழு, “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

இக்குழுவில் 7 வீராங்கனைகள் இருந்தனர். மூன்று நாட்கள் பகலிலும், மூன்று இரவுகளிலும் தொடர்ந்து எல்லையில் பணியில் ஈடுபட்டு, பாகிஸ்தான் முயற்சிகளை முறியடித்தனர். சியால்கோட்டில் உள்ள பாகிஸ்தான் நிலைகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் மூலம், எதிரிகளுக்கு தெளிவான எச்சரிக்கை வழங்கப்பட்டது.

இந்த குழுவை வழிநடத்திய நேஹா பண்டாரி, இந்திய பிஎஸ்எப்பின் வரலாற்றில் எல்லையில் நேரடி தாக்குதல் நடத்தும் குழுவுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் அதிகாரியாக திகழ்கிறார். வெறும் மூன்று ஆண்டுகளுக்குள் அவருடைய செயல்திறன், துணிச்சல் மற்றும் தலைமைத் திறனால், அவர் இந்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்.

இந்த குழுவில் 2023 ஆம் ஆண்டு பிஎஸ்எபில் சேர்ந்த நான்கு வீராங்கனைகள், மற்றும் 17 வருடங்களுக்கும் மேல் அனுபவம் கொண்ட பஞ்சாபைச் சேர்ந்த மஞ்சித் கோர், மல்கித் கோர் ஆகியோரும் இருந்தனர். ஸ்வப்னா ரத், ஷம்பா பாசக், சுமி செஸ் மற்றும் ஜோதி பனியன் போன்றவர்கள் குறுகிய அனுபவமுள்ளபோதும், மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டனர்.

“ஆபரேஷன் சிந்தூர்”  பாகிஸ்தான் தீவிரவாதிகளால் அழிக்க முயற்சி செய்யப்பட்ட நமது பெண்களின் குங்குமத்திற்கும், போரில் திலகம் சூட்டும் வீரத்துக்கும் அடையாளமாக அமைந்தது. இந்த நிகழ்வு, பெண்களும் தக்க நேரத்தில் நாட்டின் பாதுகாப்புக்காக முன்னிலை வகிக்கக்கூடியவர்கள் என்பதற்கான ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.