
தமிழகத்தில் ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேத, சித்தா போன்ற ஆயுஷ் படிப்புகளுக்கு ஐந்து அரசு கல்லூரிகள் உள்ளது. அதில் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. அதே போல் 26 தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டு அளிக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளது. இந்நிலையில் நிகழாண்டில் அரசு ஒதுக்கீடு நிர்வாக ஒதுக்கீடு தனியார் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தியுள்ளது. அதில் மூன்று ஆயுர்வேத இடங்களும், 27 யுனானி இடங்கள், 7 ஹோமியோபதி இடங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் 24 சித்தா இடங்களும் நிரம்ப வில்லை.
இதே போல தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 272 ஹோமியோபதி இடங்கள், 24 சித்தா இடங்கள் மற்றும் 54 ஆயுர்வேத இடங்கள் காலியாக உள்ளது. இதனை தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டிலும் 127 இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மொத்தமுள்ள 521 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 53 இடங்கள் காலியாக இருக்கிறது. அந்த இடங்களை இரண்டாம் சுற்று கலந்தாய்வில் நிரப்ப முடிவு செய்து இருந்தாலும் அவற்றை வருகிற பிப்ரவரி 6-ம் தேதிக்கு பின்பே நடத்தக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு தேசிய சித்தா ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவு பெறாததால் அது தாமதமவதாகவும் இந்திய மருத்துவ துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.