டெல்லி-ஒடிசா புறஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏ.சி பெட்டியில் பயணம் செய்த மூன்று பேர், படுக்கை விரிப்பு மற்றும் கம்பளிகளை திருட முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பூரி நகரத்தில் இருந்து டெல்லி நோக்கி சென்ற இந்த ரயிலில், ஒரு பெண்ணும், இரண்டு ஆண்களும் ஏ.சி முதல் வகுப்பு பெட்டியில் பயணித்துள்ளனர். இந்த வகுப்பில் தூங்கும் வசதி அமைந்துள்ளதால், பயணிகள் பயன்படுத்த வேண்டிய படுக்கை விரிப்பு, துணிகள் மற்றும் கம்பளிகள் ரயில்வே துறையால் வழங்கப்படும்.

பயணம் முடிந்து டெல்லி ரயில் நிலையத்தில் இறங்கும் போதும், அந்த மூவரும் படுக்கை விரிப்புகள் மற்றும் கம்பளியை தங்களுடைய பைகளில் எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். இதைக் கவனித்த டிக்கெட் பரிசோதகர் (TTE) மற்றும் ரயில்வே ஊழியர், அவர்களை தடுத்து விசாரித்தபோது, இது திருட்டு செயல் என்றும் ரூ.780 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அப்போது பயணிகளில் ஒருவர், “என் தாய் தவறுதலாக அதை பையில் வைத்துவிட்டார்” என விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

மேலும் இந்த சம்பவம் வீடியோவாக சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏ.சி முதல் வகுப்பில் பயணிப்பது ஒரு மரியாதை அளிக்கும் விஷயமென பலரும் கருதினாலும், இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் அந்த மரியாதைக்கு நேர்மாறானதென மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.