கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் என்றாலே எப்போதுமே அனல் பறக்கும். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்திய பவுலர் வீசும் பந்தை அடித்துவிட்டு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ரன் ஓடுகிறார். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் மோதிக்கொள்ள, அது பெரிய சண்டையாக மாறுகிறது.

வீடியோவில், கோபமடைந்த இந்திய வீரர் பாகிஸ்தான் வீரரின் சட்டையைப் பிடித்துத் தள்ளுகிறார். பதிலுக்கு அந்த வீரரும் மல்லுக்கட்ட, மைதானமே போர்க்களம் போல மாறுகிறது.

நடுவர்களும் மற்ற வீரர்களும் வந்து அவர்களைப் பிரித்து விடுகின்றனர். ஆனால், இந்த வீடியோவின் பின்னணியில் ஒரு பெரிய ட்விஸ்ட் உள்ளது. இது உண்மையில் நடந்த மோதல் அல்ல; ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கற்பனை வீடியோ ஆகும்.

‘Cricketer Mukhiyaji’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, நிஜம் போலவே இருப்பதால் பலரும் இதனை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருகின்றனர்.