
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கிருஷ்ணகிரியில் 13 வயதுக்குட்பட்ட மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்பது மட்டுமல்லாமல் பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் செயல்பட வேண்டுமே தவிர ஆசிரியர்களே இது போன்ற வன்ம செயல்களில் ஈடுபடுவது ஆசிரியர் சமூகத்திற்கே மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்டவைகளில் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.