தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் காரம் வகைகளை ஆவி நீர் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தரம் ஒன்றை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாக உள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் 27 ஒன்றியங்கள் மூலம் சுகாதாரமான முறையில் பால் மற்றும் பால் உப பொருட்களை நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் உப பொருள்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பதற்கு ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக தங்கு தடையின்றி விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரும் தங்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் காரம் வகைகளை ஆவின் நிறுவனத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.