நாட்டின் மிக உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அங்கு பணியாற்றும் அசோசியேட் பேராசிரியர் டாக்டர் ரியாசுதீன் என்பவர், ராம் பூல் மீனா என்ற பழங்குடியின ஊழியரை மிக மோசமாகத் தாக்கி, ஜாதி ரீதியாகத் திட்டியதாகப் புகார் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட ராம் பூல் மீனா அளித்துள்ள புகாரின்படி, கடந்த ஜனவரி 16-ம் தேதி பேராசிரியர் ரியாசுதீன் அவரது அலுவலகத்திற்குள் புகுந்து, “மீனா ஒரு கமீனா” என்றும் “காபிர்” என்றும் மத ரீதியாகவும் ஜாதி ரீதியாகவும் வசைபாடியுள்ளார்.

“ஒரு ஆதிவாசிக்கு இவ்வளவு அதிகாரம் எப்படி வந்தது?” எனக் கேட்டு மீனாவின் முகத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் மீனாவின் உதடு கிழிந்து, கண் அருகே பலத்த வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவ ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தவறு செய்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட மீனாவையே பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக இடமாற்றம் செய்திருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது. இந்த விவகாரம் இப்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகித் தீயாய் பரவி வருகிறது.