மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சிங்கார். இவரது மனைவி ரவணம். இந்த மூதாட்டிக்கு 80 வயது ஆகிறது. இவரது மகள் வழி பேத்தி புனிதாவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எதிர் வீட்டில் வசிக்கும் காமராஜ் என்பவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக புனிதா காமராஜரை விட்டு பிரிந்து சென்றார். காமராஜ் பலமுறை தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வர முயன்றார். ஆனால் புனிதா வீட்டிற்கு வரவில்லை.

நேற்று மாலை காமராஜ் புனிதாவின் வீட்டிற்கு சென்று அவரது தாய் நாகவள்ளி, பாட்டி ரவணம் ஆகியோரிடம் புனிதாவை வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என கூறியுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த காமராஜ் ரவம் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதனால் மூதாட்டியின் தலை மற்றும் உடலின் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காமராஜ கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.