
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தான் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை வெளியிட்டார். இதனை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களாக விநியோகித்த நிலையில் நேற்று அவர்களை காவல்துறையின் முறையான அனுமதி பெறவில்லை என கூறி கைது செய்தனர்.
அதோடு அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரையும் மாலை நேரத்தில் விடுதலை செய்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்த சமூகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து ஜனநாயகத்திற்கு விரோதமாக திமுக அரசு செயல்படுவதாகவும் மக்கள் இதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் பதிவிட்டு இருந்தார். சம்பவத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கண்டனம் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்
TVK வின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டபோது தமிழக அரசு கைது நடவடிக்கை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது. அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். த.வெ.க வின் தலைவர் திரு. விஜய் அவர்களின் கடித நகலை பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொடுத்தது மக்கள் நலன் சார்ந்தது. அந்த வகையில் த.வெ.க வின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கடித நகலை பொது மக்களிடம் கொடுத்தனர். இதற்காக த.வெ.க வின் பொதுச்செயலாளர் அவர்களையும், நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தமிழக காவல்துறையினர் கைது செய்திருப்பது ஏற்புடையதல்ல.
இது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. பெண் இனத்தின் பாதுகாப்பின் அவசியமும், சட்டம் ஒழுங்கும் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது, விழிப்புணர்வுக்கு உகந்தது. குறிப்பாக தேவையில்லாமல், அரசியல் காரணத்திற்காக எதிர்க்கட்சியினர் மீது கைது நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு த.வெ.க வின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஜி.கே வாசன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.