உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், தனது காதலுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, ஒன்றரை வயதுக் குழந்தையை வாலிபர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமித் – ரதி தம்பதியரின் ஒன்றரை வயது மகனான ஆரவ் அண்மையில் தனது தாயுடன்  பாட்டி வீட்டிற்கு வந்துள்ளான். ரதியைத் காதலித்து வந்த வீராஜ் என்ற வாலிபர், அவர் இங்கு வந்திருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளார்.

குழந்தைக்கு மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி வெளியில் அழைத்துச் சென்ற வீராஜ், மக்கள் நடமாட்டமில்லாத ஒரு தெருவில் வைத்து குழந்தையைத் தரையில் பலமுறை தூக்கி வீசி கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி  கேமராவில் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்த குழந்தையை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

புகாரைப் பெற்றவுடன் விரைந்து செயல்பட்ட போலீசார், குற்றவாளியைப் பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்தனர். இந்த நிலையில், மைன்புரி சாலை வழியாகக் குற்றவாளி வீராஜ் தப்பியோட முயல்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்த போலீசாரை நோக்கி வீராஜ் திடீரென துப்பாக்கியால் சுட்டுத் தாக்க முயன்றுள்ளார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் போலீசார் நடத்திய தற்காப்புத் துப்பாக்கிச் சூட்டில் வீராஜின் காலில் குண்டு பாய்ந்தது.

 

உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர், சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரதியைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட வீராஜ், அதற்கு இந்தக் குழந்தை தடையாக இருப்பான் என்று கருதியே இக்கொலையைச் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.