தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி சென்றுள்ளார். இவர் சில முக்கிய மத்திய அமைச்சர்களின் சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில் தன் துறை சார்பாக சில கோரிக்கைகளை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது போன்று சர்வதேச போட்டிகளை சென்னையில் நடத்துவது தொடர்பாக உதயநிதி கோரிக்கை வைக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதன்பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலினை கட்சியில் செல்வாக்கு மிக்கவராக மாற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ளதால் டெல்லியில் உதயநிதியின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவும் அவர் டெல்லிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அதோடு காரல் மார்க்ஸ், லெனின் மற்றும் பெரியார் ஆகியோரின் படங்களையும் உடைத்து அவர்கள் சேதப்படுத்தினர்.

இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் டெல்லியில் படிக்கும் தமிழ் மாணவர்களுடன் அமைச்சர் உதயநிதி வீடியோ கால் மூலமாக பேசினார். அதன் பிறகு டெல்லிக்கு தான் வரும் போது அவர்களின் நேரில் சந்திப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்ததால் தற்போது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்களையும் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல் விவகாரம் தொடர்பாகவும் மத்திய அரசிடம் உதயநிதி ஸ்டாலின் முறையிடுவார் என்று கூறப்படுகிறது.