
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேசன்(53). இவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஸ்ரீதர்(25) தனியார் ஹாலோ பிளாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முருகேசன் வீட்டிற்கு வந்தபோது ஸ்ரீதர் வீட்டில் இருந்தார்.
அப்போது 3 நாட்களாக ஏன் வேலைக்கு போகவில்லை என முருகேசன் கேட்டதால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மது போதையில் இருந்த முருகேசன் ஒரு பெரிய கரண்டியால் ஸ்ரீதரின் மார்பில் குத்தினார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ஸ்ரீதரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீதர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.