டி20 உலகக் கோப்பைத் தொடரில் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்திற்கு முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தானின் ‘ஹஸ்னா மனா ஹை’ (Hasna Mana Hain) என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்ற முகமது அமீரிடம், இந்திய ஓப்பனர் அபிஷேக் சர்மா குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமீர்: “உண்மையைச் சொல்லப்போனால், அபிஷேக் சர்மா ஒரு ‘ஸ்லாக்கர்’ (Slogger – தொழில்நுட்பம் இல்லாமல் பந்தை ஓங்கி அடிப்பவர்) மட்டுமே. அவரிடம் முறையான பேட்டிங் நுட்பம் இல்லை. அதனால் அவர் ஆட்டமிழப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அவரது உடலை நோக்கி  பந்துவீசினாலோ அல்லது மெதுவான பந்துகளை வீசினாலோ அவர் திணறுவார். அவரை வீழ்த்துவது பெரிய கடினம் கிடையாது,” என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியாவின் மிகச்சிறந்த டி20 பேட்டராக அபிஷேக் சர்மா உருவெடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 194.45 ஆக உள்ளது. அமெரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் ‘கோல்டன் டக்’ அவுட்டான அவர், அதன் பிறகு வயிற்றுப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை.

தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் அபிஷேக் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் உடற்தகுதியுடன் இருந்தால், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவார்.

அபிஷேக் சர்மா தனது 38 சர்வதேச டி20 போட்டிகளில் 1,297 ரன்களைக் குவித்துள்ளார். அவரது அதிரடி ஆட்டம் பாகிஸ்தானுக்கு எதிராக எடுபடுமா அல்லது அமீர் சொன்னது போல அவர் திணறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருப்பதால், அவர் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளராகவும் இந்தியாவுக்குப் பயன்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.