சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி பலரது கண்களையும் குளமாக்கி வருகிறது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு தாய் தனது கைக்குழந்தையுடன் சாலையோர பழக்கடை ஒன்றிற்கு வருகிறார். தன் குழந்தை பசியால் திராட்சை பழம் கேட்பதை கண்ட அந்தத் தாய், கடைக்காரரிடம் கொஞ்சம் திராட்சை பழங்களை கேட்கிறார். குழந்தைக்கு பசிக்கிறது என்பதை உணர்ந்த அந்த கடைக்காரரும் உடனே திராட்சை பழங்களை எடுத்து அந்தத் தாயிடம் கொடுக்கிறார்.

​ஆனால், அந்தத் தாய் அதற்கான பணத்தை கொடுக்க முற்பட்ட போது, அந்தப் பெரிய மனசு படைத்த கடைக்காரர் பணத்தை வாங்க அடியோடு மறுத்துவிட்டார். “குழந்தை சாப்பிடுறதுக்கு எதுக்கு காசு?” என்பது போன்ற அந்த கடைக்காரரின் உயர்ந்த குணம் காண்போரை நெகிழச் செய்துள்ளது. “இன்னும் இந்த உலகத்தில் மனிதாபிமானம் உயிரோடுதான் இருக்கிறது” என இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த கடைக்காரரை மனதார பாராட்டி வருகின்றனர்.