
காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதையடுத்து இந்தியா பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை மேற்கொண்டு பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் அதனை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததோடு பதிலுக்கு பாகிஸ்தான் மீதும் தாக்குதல் நடத்தியது.
கிட்டத்தட்ட 3 நாட்களாக நடைபெற்ற இந்தப் போர் பின்னர் முடிவுக்கு வந்தது. இந்த ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையை தொடர்ந்து பிரதமர் மோடியின் நிர்வாகத்தை புகழும் விதமாக பாஜக நாடு தழுவிய பிரச்சாரத்தை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக பாஜக ஒவ்வொரு வீட்டிற்கும் சிந்தூர் அனுப்பி வைக்கும் என்று செய்திகள் வந்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. செய்தியாளர்கள் கேள்விக்கு முதல்வர் பகவந்த்மான் கூறிய பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி அவர் கூறியதாவது, இந்த பிரச்சாரத்தை ஒவ்வொருவரும் கிண்டல் செய்கிறார்கள். நீங்கள் இதனை எடுத்துக் கொண்டு உங்கள் மனைவியிடம் கொடுத்து சிந்தூரை மோடி கொடுத்தார் என்று கூறுவீர்களா.?
இது என்ன ஒரே நாடு ஒரே கணவன் திட்டமா என்று கூறினார். மேலும் அவர் ஒரே நாடு ஒரே கணவன் திட்டம் என்று கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது.