ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரோவ்மன் பாவெல் எடுத்த அசாத்தியமான கேட்ச், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காயமடைந்த நிலையிலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா அணி நிர்ணயித்த 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடியது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசிய வைபவ் அரோரா, முதல் பந்திலேயே அபாயகரமான மிட்செல் மார்ஷை வீழ்த்தினார். இதற்கு முழு முதற்காரணமாக அமைந்தது ரோவ்மன் பாவெல்லின் அந்த ‘அக்ரோபாட்டிக்’ கேட்ச்.

வைபவ் வீசிய பந்தை மார்ஷ் பலமாக வீச முயன்றார். ஆனால் பந்து மார்ஷின் பேட்டில் சரியாக படாமல் அந்தரத்தில் உயர்ந்தது. பந்தை பிடிக்க சரியான நிலையில் இல்லாத பாவெல், முதலில் பின்னோக்கி ஓடி, பின்னர் இடதுபுறம் திரும்பி, பந்து வரும் திசையை கணித்து அந்தரத்தில் பாய்ந்து பந்தைப் பிடித்தார்.

அந்த அசாத்தியமான கேட்சைப் பிடித்து தரையில் விழுந்தபோது, பாவெல்லின் தோள்பட்டை மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த அடிபட்டது. வலியால் துடித்த அவர், நீண்ட நேரம் தரையிலேயே அமர்ந்திருந்தார். பின்னர் முதலுதவி சிகிச்சைக்காக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

காயம் காரணமாக பாவெல் இனி விளையாட மாட்டார் என்று கருதப்பட்ட நிலையில், சில நிமிடங்களிலேயே அவர் மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஃபீல்டிங்கில் சக வீரர்களுக்கு பந்துகளை வீசி உதவிய அவர், காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடியது கொல்கத்தா அணிக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது.