
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பாரு காவல் நிலைய பகுதிக்குட்பட்ட கிராமத்தில், தகாத உறவை சந்தேகித்து கொண்டு ஒருவர் தனது மனைவியை கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 13 அன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய்ப் பொடி தூவி, அவரது தொடைகள் மற்றும் அந்தரங்கப் பகுதிகள் சூடான இரும்புப் கம்பியால் சூடு வைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுப்படி, கடந்த ஆறு மாதங்களாகவே அவர் உடல் மற்றும் மனதளவிலான வன்முறைக்கு உள்ளாகி வந்துள்ளார். சமீபத்தில் அவரது கைகள், கால்கள் கட்டப்பட்டு, இரண்டு நாட்கள் பசியுடன் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும், மின்சாரம் கொடுக்க முயற்சி செய்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜூன் 15 ஆம் தேதி, அவருடைய சகோதரர் வீட்டுக்கு வந்தபோது அந்தப் பெண்ணின் நிலைமை குறித்து அறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டதன் பின்னர், அவருடைய நிலைமை தீவிரமாக உள்ளதாக கூறி, விரைவாக DMCH மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜூன் 16 அன்று பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர், மாமியார் மற்றும் இரண்டு மைத்துனர்கள் மீது பரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டு, குற்றம் சாட்டப்பட்ட கணவரை கைது செய்துள்ளனர். மற்ற மூவர் தலைமறைவாக இருப்பதால் அவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சம்பவத்தின் தன்மை மற்றும் கொடூரத்தன்மையை கருத்தில் கொண்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.