துருக்கியில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அந்நாட்டு மக்களை நிலைகுலையச் செய்துள்ளன. தெற்கு மாகாணமான கஹ்ரமன்மாராஸில் உள்ள பள்ளி ஒன்றில், 14 வயது மாணவன் ஒருவன் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஆசிரியர் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் மகனான அந்த மாணவன், தனது தந்தையின் 5 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைப் பையில் மறைத்து எடுத்து வந்து இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளான். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அலறிய மாணவர்கள், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வகுப்பறை ஜன்னல்களில் இருந்து குதித்து ஓடிய காட்சிகள் காண்போரை நிலைகுலையச் செய்துள்ளன.

இந்தத் தாக்குதலில் 13 பேர் காயமடைந்துள்ள நிலையில், 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்திய மாணவனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது பெற்றோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

“>

 

“நமது ஒளிமயமான குழந்தைகளை இழந்துவிட்டோம்” என ஜனாதிபதி எர்டோகன் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ள இந்தச் சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.