மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹவுரா – காமாக்யா வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயிலில் பயணித்த முதல் கட்ட பயணிகள், ரயிலின் உட்புறத்தைப் பொதுக் கழிவுத் தொட்டியைப் போல மாற்றியுள்ளனர். இருக்கைகளுக்கு அடியிலும், நடைபாதையிலும் உணவுப் பொட்டலங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சிதறிக் கிடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.



​இந்த வீடியோக்களைக் கண்ட இணையவாசிகள், பயணிகளின் இத்தகைய அநாகரீகச் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “அரசு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்கினாலும், மக்களிடம் பொது ஒழுக்கம் (Civic Sense) இல்லாதவரை எதையும் காப்பாற்ற முடியாது” என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ரயிலை அசுத்தம் செய்யும் பயணிகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும், ஜப்பான் நாட்டு கல்வி முறையைப் போல இந்தியக் குழந்தைகளுக்கும் தூய்மை குறித்த பயிற்சியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.