சென்னை மதுரவாயில் அருகே போரூரில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது அதை மாற்றுவதற்கு மக்கள் பட்ட கஷ்டத்தை அவர்கள் மறப்பதற்குள் 2000 ரூபாய் செல்லாது என்று அறிவித்துள்ளனர்.

கர்நாடகா தேர்தலில் தோல்வியை மறைப்பதற்காக தான் பாஜக அரசு இப்படி ஒரு கோமாளித்தனமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் 80 ஆயிரம் தமிழர்கள் வாழக்கூடிய இடத்தில் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக வீராதி வீரர் சூராதி சூரர் அண்ணாமலை அங்கு களத்தில் இறங்கி பணியாற்றினார். 80 ஆயிரம் வாக்குகள் உள்ள இடத்தில் வெறும் 10 வாக்குகள் மட்டுமே பாஜகவுக்கு அண்ணாமலை பெற்றுக் கொடுத்துள்ளார். அண்ணாமலை மிகவும் கைராசிக்காரர். மேலும் கர்நாடகாவில் பாஜகவின் தோல்வி அவர்களின் வீழ்ச்சி. இது திமுகவின் எழுச்சி என்று கூறினார்.